Sunday, January 10, 2010

கூண்டு புலிகள், பொருள்வயின் பிரிவு - கவிஞர் விக்ரமாதித்யன்

கூண்டு புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன

நாற்றக்கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை

நேரத்து இரை

காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி

குட்டி போட சுதந்திரம் உண்டு

தூக்க சுகத்துக்கு தடையில்லை

கோபம் வந்தால்

கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச்சுற்றி வருவதும்

குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது

முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்

சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து

நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்

அடர்ந்த பசியக்காட்டில்

திரிந்து கொண்டிருந்தனவாம்

இந்தக் கூண்டுப்புலிகள்.

பொருள்வயின் பிரிவு


அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து

சுகமான குளிர்வியாபித்திருந்தது

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து

ஒட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காக

பிரிந்து வந்து கொண்டிருந்தேன்.

மனசு கிடந்து அடித்துக் கொள்ள.


 
கவிஞர் விக்ரமாதித்யன் - ராமகிருஷ்ணனின் வலையிலிருந்து